இது பயங்கரவாதம்... நால்வர் கொலைக்கு பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்
லண்டனில் உள்ள ஒரு முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டு ஏறக்குறைய இரண்டு நாட்களுக்குப் பிறகு, இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒன்ராறியோவில் உள்ள லண்டனில் ஞாயிறன்று நடந்த படுகொலை சம்பவத்தை பொலிசார் திட்டமிடப்பட்ட படுகொலை என தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை, பாராளுமன்றத்தின் கீழவையில் பேசிய பிரதமர் ட்ரூடோ, இதுவொரு மிருகத்தனமான, கோழைத்தனமான, வெட்கக்கேடான வன்முறை செயல் என்று குறிப்பிட்டார்.
இதொவொன்றும் சாதாரண விபத்து அல்ல எனவும், இது பயங்கரவாத செயல் எனவும் குறிப்பிட்டுள்ள ட்ரூடோ, நமது சமூகத்தில் ஒருவர் மீது வெறுப்பால் தூண்டப்பட்ட வெறிச்செயல் எனவும் தெரிவித்துள்ளார்.
ஞாயிறன்று லண்டனை சேர்ந்த 20 வயது நபர் பாதசாரிகளான ஐந்து பேர் கொண்ட குடும்பம் மீது தமது வாகனத்தை மோதிவிட்டு, தப்பினார்.
இந்த நிலையில் மரணமடைந்த நபர்கள் தொடர்பில் பொலிசார் தகவல் ஏதும் வெளியிடவில்லை என்றாலும், அந்த குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், 46 வயது Salman Afzaal, அவரது மனைவி 44 வயது Madiha Salman, இவர்களது 15 வயது மகள் Yumna Salman மற்றும் அப்சலின் 74 வயது தாயாரும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த தம்பதியின் ஒன்பது வயது மகன் ஃபயஸ் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார், ஆனால் உயிர் பிழைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் 20 வயது Nathaniel Veltman கைது செய்யப்பட்டு, அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.