தேர்தல் பரப்புரையில் பிரதமர் ட்ரூடோவுக்கு கொலை மிரட்டல்
ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக பிரதமர் ட்ரூடோ தேர்தல் பரப்புரையானது ஆர்ப்பாட்டக்காரர்களால் முடக்கப்பட்டுள்ளது.
கனடாவில் பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், பிரதமர் ட்ரூடோ தொடர் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஒன்ராறியோவின் போல்டன் பகுதியில் நடந்த தேர்தல் பரப்புரையில் பொதுமக்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
தற்போது ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக பொதுமக்களின் கோபத்திற்கு இலக்காகியுள்ளார் ட்ரூடோ. இந்த முறை, கேம்பிரிட்ஜ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பகல் முன்னெடுக்கப்பட்ட பரப்புரையில் ட்ரூடோ மக்களின் கொந்தளிப்புக்கு பயந்து ஒரு மணி நேரம் தாமதமாக மேடைக்கு வந்தார்.
இருப்பினும், ட்ரூடோ மேடை ஏறியதும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதுடன், கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது. பொது ஊரடங்கால் யாருக்கு என்ன பயன் என கேள்வி எழுப்பியுள்ள அந்த கும்பல், மாஸ்க் அணிந்திருக்கவில்லை என்பதுடன் சமூக இடைவெளியும் பின்பற்றவில்லை.
பிரதமர் ட்ரூடோ தமது பரப்புரை தொடர்ந்ததுடன், கொரோனா பரவல் தொடர்பில் சரியான முடிவுகளை எடுத்துள்ளதாகவும், தடுப்பூசியால் பலர் பயன்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டுமின்றி, இந்த சலசலப்புகளுக்கு பயந்து தாம் ஒளிந்துகொள்ளப் போவதில்லை எனவும், துணிச்சலுடன் எதிர்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.