சரணடைய வைக்க சூழ்ச்சி செய்யும் ட்ரம்ப் ; ஈரானின் அதிரடி
ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், தனது எதிரிகளின் "வஞ்சகத் திட்டத்தை" ஈரான் முறியடிக்கும் என்றும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் "உள்நாட்டுப் பூசல்கள் மற்றும் கடற்படை முற்றுகை" மூலம் நாட்டின் சரணடைதலை நாடுகிறார் என்றும் உறுதிப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ISNA-வின்படி, ஈரானியர்களுக்கான ஒரு ஒலிச் செய்தியில், முகமது பாகர் காலிபாஃப் கடந்த இரண்டு மாதங்களாக நாட்டு மக்கள் காட்டிய மன உறுதியைப் பாராட்டியதோடு, அவர்களுக்கு வலிமை கிடைக்கட்டும் என்றார்.

நாடாளுமன்ற சபாநாயகர் தனது ஒலிச் செய்தியில், எதிரி இப்போது ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளதாக குறிப்பிட்டதோடு, "எதிரி, கடற்படை முற்றுகை மற்றும் ஊடக கையாளுதல் மூலம் பொருளாதார அழுத்தத்தையும் உள்நாட்டுப் பூசல்களையும் தூண்டி, நம்மை உள்ளிருந்தே பலவீனப்படுத்த அல்லது முற்றிலுமாக வீழ்த்த விரும்புகிறார்.
இது எதிரியின் ஒரு புதிய சதியாகும். இதற்கு சிறந்த சான்று ட்ரம்பின் நிலைப்பாடுகளே. அவர் நாட்டை வெளிப்படையாக தீவிரவாதிகள் மற்றும் மிதவாதிகள் என இரண்டு குழுக்களாகப் பிரிக்கிறார்.
பின்னர் உடனடியாக கடற்படை முற்றுகையை பற்றி பேசுகிறார், அதன்பிறகு ஈரான் ஒரு உடன்பாட்டிற்கு வரும் வரை அந்த முற்றுகை நீடிக்கும் என்று கூறுகிறார். டிரம்பின் திட்டம் கட்டாயப்படுத்துவதே என்பது மிகவும் தெளிவாகிறது," என்றும் கூறினார்.