தொடங்கிய ஒரே மாதத்தில் மூடப்பட்ட டிரம்பின் வலைத்தளம்
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், ஒரு மாதத்திற்கு முன் துவக்கிய வலைதளத்தை திடீரென மூடி விட்டார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்தபோது, 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைதளங்களை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிறுவனங்கள் ஒருதலை பட்சமாக செய்திகளை பகிர்வதாக குற்றஞ்சாட்டினார். இந்த சமூக வலைதளங்களில் அவரை கோடிக்கணக்கானோர் பின் தொடர்ந்து வந்தனர். அதிபர் தேர்தலின் தோல்விக்குப் பின், இந்தாண்டு ஏப்ரலில், அமெரிக்க பார்லி.,யில், டிரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இதில் ஒரு போலீஸ்காரர் உட்பட, ஐந்து பேர் பலியாயினர். இந்த கலவரத்திற்கு டிரம்பின் வன்முறையை துாண்டும் பேச்சு தான் காரணம் என, தெரியவந்தது. இதையடுத்து பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகங்களும், டிரம்பின் கணக்கை முடக்கி விட்டன.
இதனால் ஒரு மாதத்திற்கு முன் டிரம்ப், தன் வலைதளத்தில் 'பிளாக்' எனும் பக்கத்தை துவக்கி, அதில் கருத்துகளை தெரிவித்து வந்தார். தற்போது இந்த வலைதளப் பிரிவையும் அவர் மூடி விட்டார். இதற்கு, டிரம்ப் ஆதரவாளர்களின் பதிவுகளை சமாளிக்கும் அளவிற்கு வலிமையாக, கணினியின் 'சர்வர்' இல்லை என காரணம் கூறப்படுகிறது.
வரும் 2024ல் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ள டிரம்ப், விரைவில் வேறு ஒரு வலைதளத்தில் இணைந்து கருத்துகளை தெரிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.