அமெரிக்க இராணுவ வலிமையைப் புகழ்ந்த ட்ரம்ப் ; எதிர்க்கட்சியினருக்கு சாடல்
அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் தொடக்க வார இறுதியை முன்னிட்டு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டின் இராணுவத்தைப் பாராட்டியதுடன், ஜனநாயக சோசலிஸ்டுகள் மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.
சுதந்திர தினத்தின் முன்னிரவில் தெற்கு டகோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மவுண்ட் ரஷ்மோர் நினைவிடத்தில் உரையாற்றிய அவர், தேசிய அடையாளம், பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அரசியல் தொடர்பாக தனது கருத்துகளை வெளிப்படுத்தினார்.
அமெரிக்கா உலகின் வலிமையான இராணுவத்தைக் கொண்ட நாடாகத் திகழ்வதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், உலக அரங்கில் அமெரிக்காவின் இராணுவ வலிமை தொடர்ந்தும் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

அமெரிக்காவுக்குள் நாட்டின் அடிப்படை மதிப்புகளுக்கு முரணான கொள்கைகளைக் கொண்ட சிந்தனைகள் பரவி வருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், ஜனநாயக சோசலிஸ்டுகளின் எழுச்சியை அமெரிக்கா எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக வர்ணித்தார். மேலும், கம்யூனிசக் கொள்கைகள் அரசியலமைப்பின் அடிப்படை விழுமியங்களுக்கு எதிரானவை என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான பதற்றம், பணவீக்கம் மற்றும் எரிசக்தி விலை உயர்வு போன்ற விவகாரங்களையும் தனது உரையில் ட்ரம்ப் குறிப்பிட்டார். இதேவேளை, ஜனாதிபதி ட்ரம்ப்பின் கருத்துகளை ஜனநாயகக் கட்சி விமர்சித்துள்ளது.
கட்சியின் மூலோபாயவாதி அமேஷியா கிராஸ், ட்ரம்ப் நாட்டின் பன்முகத்தன்மை கொண்ட வரலாற்றை மறைக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும், சமீபத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் ஏமாற்றமே அவரது பேச்சில் பிரதிபலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.