பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல் ; ட்ரம்ப் எச்சரிக்கை
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்காக அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஆயுதங்களால் நிரப்பப்பட்டு வருவதாக டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
நியூயோர்க் போஸ்ட் இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஈரான் உடனான உறவுகளில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அமெரிக்கப் போர்க்கப்பல்களில் இதுவரை தயாரிக்கப்பட்டதிலேயே மிகச் சிறந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த முறை பயன்படுத்தியதை விடவும் சிறந்த மற்றும் சக்திவாய்ந்த ஆயுதங்களை தற்போது தயார் நிலையில் வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பேச்சுவார்த்தைகளில் சுமுகமான உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த ஆயுதங்கள் ஈரான் மீது மிகவும் பயனுள்ள முறையில் பயன்படுத்தப்படும் என அவர் எச்சரித்துள்ளார்