சர்வதேச வரி தொடர்பான அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பிற்கு கனடா வரவேற்பு
சர்வதேச வரி விதிப்புக்கள் குறித்து அமெரிக்க நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பிற்கு கனடா ஆதரவினை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக நீதிமன்றம், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த பரந்த வரி நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை எனத் தீர்ப்பு வழங்கியதை, கனடா பிரதமர் மார்க் கார்னி "மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நீதிமன்றம் International Economic Emergency Powers Act (IEEPA) எனப்படும் சட்டத்தை பயன்படுத்தி, டிரம்ப் உலகளாவிய அளவில் விதித்த வரிகளை சட்டபூர்வமற்றவை எனத் தள்ளுபடி செய்தது.
இந்த தீர்ப்பு, கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவிற்கு விதிக்கப்பட்ட “ விடுதலை நாள்” வரிகள் மற்றும் ஃபென்டனில் தொடர்பான வரிகளையும் முற்றாகத் தடுத்து நிறுத்தியுள்ளது.
“IEEPA சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட அமெரிக்க வரிகள் சட்ட விரோதம் மற்றும் நீதியற்றவை என்பதே கனடாவின் நீண்டகால நிலைபாடு” என பிரதமர் தெரிவித்துள்ளார்.
“இந்த நீதிமன்ற தீர்ப்பு அதனை உறுதி செய்கிறது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அமெரிக்காவுடன் நமது வர்த்தக உறவு இன்னும் மோசமான பாதிப்புகளை சந்தித்து வருகிறது எனவும் குறிப்பாக, உருக்கு, அலுமினியம் மற்றும் வாகனத் துறைகளில் 232 வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கனடாவின் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் கர்னி தெரிவித்துள்ளார்.