அமெரிக்காவின் எதிர்ப்பை சம்பாதிக்கும் துருக்கி: ரஷ்யாவுடன் ஒப்பந்தம்
துருக்கி அரசு ரஷியாவிடம் இருந்து எஸ்400 வகை ஏவுகணை அமைப்பை வாங்கியது. இதற்கு அமெரிக்க அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ரஷ்யாவின் ஏவுகணை பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என அமெரிக்கா தெரிவித்தது.
இது தொடர்பாக நேட்டோ கூட்டமைப்பின் உறுப்பு நாடான துருக்கி மீது, அமெரிக்கா கடந்த ஆண்டு பொருளாதார தடை விதித்தது. இந்த நிலையில், ரஷியாவிடம் இருந்து மேலும் ஒரு எஸ்400 ஏவுகணை அமைப்பை வாங்க முடிவு செய்திருப்பதாக துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் அறிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்த தகவலை அவர் கூறியுள்ளார்.
மேலும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பாட்ரியட் ஏவுகணையை வாங்குவதற்கான வாய்ப்பு தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள அவர், எப்-35 ஜெட் விமானத்திற்கான 1.4 பில்லியன் டொலர்களை துருக்கி அரசு செலுத்தி பிறகும், அமெரிக்கா அதனை இன்னும் தங்களிடம் ஒப்படைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.