மொன்றியல் விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் – ஏர் கனடா ஊழியர்கள் இருவர் கைது
கனடாவின் மொன்றியல்–பியர் எலியட் ட்ரூடோ சர்வதேச விமான நிலையம் ஊடாக கொக்கெய்ன் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை கடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஏர் கனடா நிறுவனத்தின் இரு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, புதன்கிழமை காலை மொன்றியல் பகுதியில் உள்ள இரண்டு குடியிருப்புகள் மற்றும் ஒரு வாகனத்தில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மேலும், ஏர் கனடாவின் ஒத்துழைப்புடன், டொர்வால் பகுதியில் அமைந்துள்ள குறித்த ஊழியர்கள் பணியாற்றும் இடத்திலும் சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் ஏர் கனடாவின் விமான நிலைய தரைத்தள செயல்பாடுகள் தொடர்பான பல்வேறு பதவிகளில் பணியாற்றி வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் தொடர்பான விசாரணைப் பிரிவினரின் விசாரணையில், பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்குள் உள்ள விமான நிலையப் பகுதிகளுக்கு பயணப் பொதிகளை கொண்டு செல்வதற்கும், அங்கிருந்து அவற்றை நகர்த்துவதற்கும் குறித்த இருவரும் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
பொதிகளின் பயணச் சீட்டுகள் மாற்றப்பட்டு, போதைப்பொருட்கள் அடங்கிய பொதிகளை குறிப்பிட்ட நாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைக்கு அவை பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.