2 தலை, 1 இதயம்... ஒட்டி பிறந்த இரட்டைக் குழந்தைகள்... இந்தியாவில் அரிய சம்பவம்
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் அலிகரில் ஒட்டிய நிலையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்த அரிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அலிகர் சாஸ்னி கேட் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் குமார் என்பவரின் மனைவி நீரு, பிரசவ வலியால் மாவட்ட மகளிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஒரே இதயம் இருப்பதால் எதிர்காலத்தில் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு
கடந்த17 ஆம் திகதி, இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. இந்த குழந்தைகள் இரண்டு தலை, இரண்டு கை, நான்கு கால்களுடன் பிறந்தன.
ஆனால், இதயம் ஒன்று. இது குறித்து மருத்துவர் கூறுகையில், “குழந்தைகள் தற்போது நலமாக உள்ளனர். சாதாரண குழந்தைகள்போல பால் குடித்து வருகின்றனர். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளோம். ஆனால், ஒரே இதயம் இருப்பதால் எதிர்காலத்தில் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது” என்றார்.
அறிவியல் வளர்ச்சி எவ்வளவு முன்னேறியிருந்தாலும், இயற்கையின் இத்தகைய அரிய நிகழ்வுகள் மனிதர்களை ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. அறுவை சிகிச்சைக்கு பிறகு தாயின் உடல்நிலை மோசமடைந்ததால், தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.