கனடாவில் வீட்டின் உரிமையாளர்களுடன் மோதல் –இருவர் மருத்துவமனையில் அனுமதி!
கனடாவின் வாட்டர்லூ பிராந்தியத்தில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் ஏற்பட்ட கடுமையான தாக்குதல் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:40 மணியளவில், கிங் ஸ்ட்ரீட் நார்த் அருகே உள்ள கொலம்பியா ஸ்ட்ரீட் வெஸ்ட் பகுதியில் அமைந்த குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் இச்சம்பவம் நடந்துள்ளது.
குறிப்பிட்ட ஒரு வீட்டிற்குள் இரு நபர்கள் நுழைய முயன்றதாகக் கூறப்படும் நிலையில், அவர்களுக்கும் வீட்டின் உரிமையாளர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது.

இந்த மோதலில் 34 மற்றும் 29 வயதுடைய இரு ஆண்கள் பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் அல்லது அப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட கண்காணிப்புக் கேமரா மற்றும் டேஷ்கேம் வீடியோ காட்சிகள் வைத்திருப்பவர்கள் உடனடியாகத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறு வாட்டர்லூ பிராந்தியக் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.