ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர் இருவர் அதிரடியாக கைது
தென்கிழக்கு ஐரோப்பாவில் சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த இரண்டு பேரை, கொசோவோ (Kosovo) பொலிசார் கைது செய்துள்ளனர்.
கொசோவோவின் ஜிலான் நகரின் பெர்லெப்னிச்சே (Përlepnicë) கிராமத்தில் நேற்று இந்த கைது இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்
ஒரு வாகனத்தின் சாரதி, போலீசார் தன்னை கவனித்ததை உணர்ந்தவுடன், வேகத்தை அதிகரித்து தப்பிச் செல்ல முயன்றார்.
அருகிலுள்ள இடத்தில் வாகனத்தை விட்டு இறங்கி ஓடிவிட்டார். அதே பகுதியில் ஆவணங்களின்றி இரு ஆண்கள் இருந்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்த வாகனத்தின் மூலம் செர்பியாவிலிருந்து கொசோவோவில் (Kosovo) நுழைந்ததாகவும் தெரிய வந்தது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையின் போது, குறித்த வாகனம் செர்பியாவைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, இரண்டு வாரங்கள் கொசோவோவில் தங்க அனுமதி வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
மேலும் ஆட்கடத்தல் விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.