பிலிப்பைன்ஸை மிரட்டும் புயல் ; 10 ஆயிரம் பேர் வெளியேற்றம்!
பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள ‘ரகசா’ புயல் காரணமாக, 10 ஆயிரம் பேர் வரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாகச் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிலிப்பைன்ஸின் வடக்கு பகுதியில் ககாயன் மாகாணம் அருகே “ரகசா" என்ற புதிய புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் காரணமாக, மணிக்கு 215 கி.மீ. வேகத்தில், காற்று வீசுவதுடன், பலத்த மழை பெய்து வருவதாக பிலிப்பைன்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனா, தைவாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
ரகசா புயலின் எதிரொலியாக, நிலச்சரிவுக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த புயல், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை நோக்கி நகரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதனால், சீனாவிலும் முன்னெச்சரிக்கை செயற்பாடாக, சுமார் 4 இலட்சம் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றச் சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், 500க்கும் மேற்பட்ட விமானச் சேவைகளும் இரத்து செய்யப்பட்டு உள்ளதாகச் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஹொங்கொங் விமான நிலையம் 36 மணி நேரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் புயல் கடக்கும் வழியில் உள்ள தைவான் நாட்டிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.