ஹொங்கொங், தெற்கு சீனாவை நோக்கி நகரும் ரகசா புயல்
இந்த ஆண்டின் மிகவும் ஆபத்தான புயலாக கருதப்படும் ரகசா புயல், தற்போது சீனாவை நோக்கி நகர்ந்து செல்வதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் 20 இலட்சம் பேர் வரை, பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக சீன செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்ட வானூர்தி சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இந்த ரகாசா புயல் மணிக்கு 200 முதல் 230 கிலோமீற்றருக்கும் அதிக வேகத்தில் வீசக்கூடும் என சீனாவின் தேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
முன்னதாக, ரகசா புயலினால், தைவானில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், வெள்ளம் போன்ற அனர்த்தங்களினால் இதுவரை 32 பேர் காயமடைந்துள்ளதாவும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காணாமல் போனவர்களை மதிப்பிடுதல் மற்றும் தேடுதல் பணிகள் தொடர்வதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பிலிப்பைன்ஸ் நாட்டில் ரகசா புயலில் சிக்கி 9 பேர் வரை உயிரிழந்துள்ளமையை அந்த நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.