இது சுத்த பைத்தியக்காரத்தனம்... 45 நிமிடங்களில் நடந்தே செல்லும் தூரத்திலுள்ள கணவர் வீட்டுக்கு விமானத்தில் செல்லும் கனேடிய பெண்
எல்லைக்கருகில் வாழும் கனேடிய பெண் ஒருவர் அமெரிக்காவிலுள்ள தன் கணவர் வீட்டுக்கு 45 நிமிடங்களில் நடந்தே சென்றுவிட முடியும் என்று இருக்கும் நிலையில், எல்லை விதிகள் காரணமாக செலவு செய்து விமானத்தில் கணவர் வீட்டுக்கு செல்கிறார்.
Birgit Heinbach, கனடாவின் சர்ரேயில் வாழ்கிறார். அவரது கணவருடைய வீடு எல்லைக்கப்பால் வாஷிங்டனிலுள்ள Blaine என்ற இடத்தில் உள்ளது.
வழக்கமாக Birgit நடந்தே கணவர் வீட்டுக்குச் சென்றுவிடுவார். ஆனால் இப்போது கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான எல்லை மூடப்பட்டுள்ளது. காரில் அமெரிக்காவுக்குள் செல்ல அனுமதி இல்லை.
ஆனால், விமானத்தில் செல்லலாம். அதுவும் Birgitஐப் பொருத்தவரை, அவர் வான்கூவரிலிருந்து சியாட்டிலுக்கு ஒரு விமானம், சியாட்டிலிலிருந்து Bellinghamக்கு மற்றொரு விமானம் பிடித்து செல்லவேண்டும்.
இதிலேயே முக்கால் நாள் சென்றுவிடும். அதாவது, கனடாவுக்கு வர விரும்பும் அமெரிக்கர்களுக்கு இந்த திங்கட்கிழமை ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது. கனடா, முழுவதும் தடுப்பூசி பெற்ற அமெரிக்க சுற்றுலாப்பயணிகளை வரவேற்பதற்காக, சீக்கிரம் தனது எல்லையை திறந்துவிட இருக்கிறது என்பதுதான் அது.
ஆனால், அமெரிக்கா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு அமெரிக்காவிலிருந்து எந்த செய்தியும் வரவில்லை. எல்லைகள் திறக்கப்படுமென இரண்டு நாட்டு மக்களும் நம்பிக்கொண்டிருந்தார்கள்.
ஆனால், அது நடக்கவில்லை. ஆகத்து 9 முதல் முழுமையாக தடுப்பூசி பெற்ற அமெரிக்கர்கள் கனடா வரலாம் என கனடா அறிவித்துவிட்டாலும், அமெரிக்கா இன்னமும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
எல்லை திறக்கப்படவில்லை என்றாலும், தரை வழியாகத்தான், அதாவது கார் முதலான வாகனங்கள் மூலம் அமெரிக்காவுக்குள் நுழையத்தான் கனேடியர்களுக்குத் தடை. ஆனால், கொரோனா இல்லை என்பதைக் காட்டும் உரிய ஆவணங்களுடன் விமானம் வாயிலாக அவர்கள் அமெரிக்கா செல்லலாம்.
ஆனால், 45 நிமிடங்களில் நடந்தே செல்லக்கூடிய என் கணவர் வீட்டுக்கு செல்வதற்கு, நான் ஒரு நாளின் பெரும்பகுதியை செலவிட்டு, இரண்டு விமானங்கள் பிடித்து செல்லவேண்டியிருக்கிறது, இது சுத்த பைத்தியக்காரத்தனம் என்கிறார் Birgit.