இங்கிலாந்து பிரதமருக்கு அபராதம்!
கொரோனா விதிமுறையை மீறி விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு(Boris Johnson) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது விதிமுறைகளை மீறி பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றாக குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக 2020-ம் ஆண்டு ஜூன் 19-ந் திகதி பிரதமர் போரிஸ் ஜான்சனின் (Boris Johnson) பிறந்தநாளையொட்டி பிரதமர் அலுவலகத்தில் அதிக அளவில் அரசு ஊழியர்கள் திரண்டு விருந்து நிகழ்ச்சி நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விசாரணை நடத்திய லண்டன் பொலிஸார் கொரோனா விதிமுறையை மீறி விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றதை உறுதிப்படுத்தினர்.
இந்த விவகாரத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன்(Boris Johnson) நாடாளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரியபோதும், அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா விதிமுறையை மீறி நடந்த விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதற்காக பிரதமர் போரிஸ் ஜான்சன்(Boris Johnson) மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அந்த நாட்டின் நிதி மந்திரி ரிஷி சுனக்(Rishi Sunak) ஆகிய இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக இருவருக்கும் பொலிஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்கள் இருவருக்கும் 50 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5 ஆயிரம்) முதல் 300 பவுண்டுகள் (ரூ.30 ஆயிரம்) வரை அபராதம் விதிக்கப்படலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.