உக்ரைன் அந்த முடிவை எடுத்தால் மூன்றாம் உலகப் போர் உறுதி: எச்சரிக்கும் ரஷ்யா
உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைந்தால் மூன்றாம் உலகப் போர் உறுதி என்று ரஷ்ய அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் சமீப நாட்களில் வேகமெடுத்துள்ள நிலையில், உலக நாடுகள் பல அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசனையில் ஈடுபட தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைச் செயலர் அலக்ஸாண்டர் வெனடிக்டோவ் டாஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் பேசிய அவர், நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் துரித நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.
இது கண்டிப்பாக போரை உக்கிரமாக்கும் என்று அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் இருக்காது. இருந்தும் உக்ரைன் இவ்வாறு நடந்துகொள்கிறது. ரஷ்யா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.
உக்ரைன் தன்னை நேட்டோ அமைப்புடனோ அல்லது அமெரிக்காவின் ஆட்டுவிப்புக்கு ஆடும் வேறு கூட்டமைப்புகளிலோ இணைக்குமானால் நிச்சயம் அதற்கான விளைவுகளை சந்திக்கும்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால் மூன்றாம் உலகப் போர் மூளுவது உறுதி என்றார். மேலும், உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து பல்வேறு உதவிகளைச் செய்துவருகின்றன.
இவ்வாறாக மேற்கத்திய நாடுகள் உதவி செய்து ரஷ்யாவுக்கான நேரடி களப் போட்டியாளராக உருவெடுத்து வருகின்றன.
உக்ரைனுக்கு தங்கள் கூட்டமைப்புக்குள் இடம் தருவது என்பது தற்கொலைக்கு சமமானது என்று நேட்டோ நாடுகளுக்கே தெரியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.