உக்ரைன் மீது எதிர்வரும் 16 ஆம் திகதி ரஷ்யா படையெடுக்கும்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை
உக்ரைன் மீது ரஷ்யா எதிர்வரும் 16 ம் திகதி படையெடுக்கும் என அமெரிக்கா எச்சரிக்கை தகவல் ஒன்றை விடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக உலக நாடுகள் பலவும் உக்ரைனில் இருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தி வருகின்றன.
இதேவேளை, உக்ரைன் எல்லையில் ரஷ்யா சுமாா் 1 லட்சம் படை வீரர்களையும், போர் தளவாடங்களையும் குவித்துள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது.
உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் ரஷியா படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதனை ரஷ்யா மறுத்து வருகிறது. இந்த நிலையில் எதிர்வரும் 16 ம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் என அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகள் கூறுகையில், “சீனாவில் நடந்து வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடையும். வருகிற 20 ம் திகதிக்கு முன்பாக ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுக்கலாம். அந்த வகையில் 16 ம் திகதி ரஷ்யா தனது படையெடுப்பை தொடங்கும் என தெரிகிறது” என்றனர்.
மேலும் அவர்கள் “ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று முன்தினம் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின்போது இந்த தேதியை அவர்களிடம் அவர் குறிப்பிட்டு கூறினார்” எனவும் தெரிவித்தனர்.
உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, உக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்கள் அனைவரும் 48 மணி நேரத்துக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் “படையெடுப்பு வான்வழி குண்டுவீச்சுடன் தொடங்கலாம், இது புறப்படுவதை கடினமாக்கும் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். எனவே தாமதிக்காமல் உடனடியாக வெளியேறுவது நல்லது” என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே படையெடுப்பு குறித்து அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து உஷார் ஆகியுள்ள உலகநாடுகள் பலவும் உக்ரைனில் இருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் பிரித்தானியா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, பின்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உக்ரைனில் இருக்கும் தங்கள் குடிமக்களை விரைவில் வெளியேறுமாறு வலியுறுத்தி உள்ளன.
இதற்கிடையில் உக்ரைனுக்கான ரஷிய தூதர் மற்றும் அங்குள்ள ரஷிய தூதரகங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேற்று முதல் அங்கிருந்து வெளியேற தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இப்படி உக்ரைன்-ரஷியா இடையிலான பதற்றம் உச்சத்தை எட்டி வரும் நிலையில் அச்சுறுத்தலை சமாளிக்க மற்றும் நேட்டோ படைகளுக்கு வலு சேர்ப்பதற்காக போலந்து நாட்டின் எல்லைக்கு அமெரிக்கா கூடுதலாக மூவாயிரம் படை வீரர்களை அனுப்பி வைத்துள்ளது