புடினுக்கு ஆதரவு தெரிவித்த கனேடியர்... மொத்த தெருவிலும் பறந்த உக்ரேனிய கொடி!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஒருவர் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்து தேசியக் கொடியை பறக்கவிட, மொத்த தெருவும் அவருக்கு எதிராக திரும்பிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் குறிப்பிட்ட தெருவில் திடீரென்று ரஷ்ய கொடிகள் பறக்கவிடப்பட்டதை கவனித்த 20 வயது மாணவி Izabelle Stevens, அது ஒரு தற்செயலான நிகழ்வு என்றே கருதியுள்ளார்.
ஆனால், அதற்கு காரணமான நபரின் சமூக ஊடக பக்கத்தை கவனித்த அவருக்கு உண்மை புரிந்தது. அந்த நபர் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை ஆதரிப்பதுடன், விளாடிமிர் புடினின் தீவிர ரசிகராகவும் இருந்துள்ளார்.
உக்ரைனில் நடந்தேறும் கொடூரங்களை செய்தி ஊடகங்கள் வழியாக தெரிந்துகொண்டுள்ள அவருக்கு அது கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதற்கு கண்டிப்பாக எதிர்வினையாற்ற வேண்டும் என உறுதிகொண்ட அவர் TikTok வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த காணொளி பலரது கவனத்தையும் ஈர்க்கவே, அப்பகுதி மக்கள் அனைவரும் அந்த நபருக்கு எதிராக உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர்.
முதலில் அப்பகுதி மக்கள் எதிர்வினையாற்ற தயங்கியதாகவும், மாணவி Izabelle Stevens எடுத்துக்குறிய பின்னரே, அவர்களும் உண்மை நிலையை புரிந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, மொத்த தெரு மக்களும் தங்கள் குடியிருப்பில் உக்ரேனிய கொடியை கட்டிவைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, மெக்சிகோவில் விடுமுறைக்கு சென்றவர் தமது அண்டை வீட்டாருக்கு தகவல் அளித்து, தமது குடியிருப்பிலும் உக்ரேனிய கொடியை பறக்கவிட கோரியுள்ளார் என்பது மறக்க முடியாதது என்கிறார் மாணவி Izabelle Stevens.