ஆப்கானிஸ்தான் தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எடுத்த தீர்மானம்
ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறக்கூடாது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆப்கானிஸ்தான் நாடு முழுவதையும் தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் பல்வேறு நாட்டு மக்களை அவரவர் நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் பணியில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று அமெரிக்க ராணுவத்தின் கடைசி வீரரும் ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து கிளம்பி தங்கள் தாயகம் சென்றார். அமெரிக்கா வெளியேறி விட்டாலும் மக்களுக்கு தேவையான உதவிகளை ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாக செய்வோம் என அமெரிக்கா உறுதி அளித்தது.
ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தன. அந்த தீர்மானம் "எந்த ஒரு நாட்டையும் அச்சுறுத்துவதற்கு அல்லது தாக்குதல் நடத்துவதற்கு ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படக்கூடாது என்றும், அங்கு பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்க கூடாது" என வலியுறுத்தியது.
மேலும் "ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து வெளிநாட்டினர் மற்றும் உள்நாட்டு மக்கள் பாதுகாப்பான மற்றும் ஒழுங்கான முறையில் வெளியேற தலீபான்கள் அனுமதிக்க வேண்டும்" எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக இடம்பெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு இடம்பெற்றது. அதில் 13 நாடுகள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.
இதேவேளை எந்த ஒரு நாடும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கவில்லை. அதேவேளை நிரந்தர உறுப்பு நாடுகளான ரஷியா மற்றும் சீனா இந்த ஓட்டெடுப்பை புறக்கணித்தன. எனினும் 13 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது.
முன்னதாக 15 நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு தற்போது இந்தியா தலைமை தாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.