3 மாதங்களுக்கு பிறகு ஊரடங்கு தளர்வுகளுக்கு அனுமதி அளித்த நாடு!
இங்கிலாந்தில் 3 மாதங்களுக்கு பிறகு ஊரடங்கில் சில தளர்வுகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று பரவி வந்த நிலையில், அங்கு பாதிப்பு எண்ணிக்கை தினமும் அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு கடண்ட ஜனவரி மாதம் முழு ஊரடங்கை அறிவித்தது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் முடக்கப்பட்டன. இதனால் மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
இதற்கிடையில் இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. மேலும் அரசு மேற்கொண்ட தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக அங்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இதையடுத்து ஊரடங்கில் சில தளர்வுகளை இங்கிலாந்து அரசு அறிவித்தது.
அதன்படி கடந்த மார்ச் 8 ஆம் தேதி பள்ளிகள் சில கட்டுப்பாட்டு விதிகளுடன் திறக்கப்பட்டன. அதனை தொடர்ந்து 2 ஆம் கட்டமாக தனியார் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறக்க மார்ச் மாத இறுதியில் அனுமதியளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 3 ஆம் கட்டமாக பொருளாதார நடவடிக்கைகளை கட்டுப்பாடுகளுடன் துவங்க கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி அனுமதி வழங்கப்பட்டது.
இதனையடுத்து தற்போது இங்கிலாந்து மக்கள் பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஓட்டல்கள், கிளப் மற்றும் மால்களுக்கு சென்று வருகின்றனர்.
இதனால் பல நாட்களாக முடங்கி இருந்து பொருளாதார மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மீண்டும் தங்கள் பணியை துவங்கியுள்ளன. ஊரடங்கில் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டாலும், மக்கள் பொறுப்புடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.