இரவு விருந்து நிகழ்ச்சியில் திடீர் துப்பாக்கிச்சூடு! 4 பேர் பரிதாபமாக பலி
அமெரிக்காவில் இரவு விருந்து நிகழ்ச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (24-01-2022) இரவு விருந்து நடைபெற்றது. இதில் பலர் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த இரவு விருந்து நடைபெற்ற வீட்டில் நள்ளிரவு 1 மணியளவில் திடீரென துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூடு குறித்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இரவு விருந்து நடைபெற்ற வீட்டில் 2 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 4 பேர் உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் ஒரு நபர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்த போலீசார் துப்பக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக அந்த வீட்டிற்கு அருகில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.