ரொறன்ரோ பல்கலைக்கழக மாணவி இலங்கையில் கைது; செய்த மோசமான செயல்!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, சுமார் 35 கோடியே 26 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 'ஹஷிஷ்' (Hashish) போதைப்பொருள் தொகையை நாட்டுக்குள் கடத்த முயன்ற கனடாவாழ் பல்கலைக்கழக மாணவி ஒருவர், சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் (ஜூன் 23) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கனடாவின் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் தாதியர் பயிற்சி பெற்றுவரும் 18 வயதுடைய மாணவி ஆவார்.

மறைத்து வைக்கப்பட்டிருந்த 35 கிலோ 'ஹஷிஷ்' போதைப்பொருள்
தனது கல்விச் செலவிற்காக 12,500 கனேடிய டொலர்களும், வெளிநாட்டுச் சுற்றுலா ஒன்றும் வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் பேரில், ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் சாரதி ஒருவரே இந்த போதைப்பொருள் தொகையை அவரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்.
சந்தேகநபரான மாணவி, கனடாவின் ரொறன்ரோ நகரிலிருந்து போதைப்பொருளுடன் துபாய் வழியாக, எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-648 எனும் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான நிலையத்தில் நடைமுறையில் உள்ள 'மீட் அண்ட் கிரீட்' (Meet and Greet) எனும் விசேட வசதியைப் பயன்படுத்தி, தனது பயணப் பொதிகளை எடுத்துக்கொண்டு, எவ்விதப் பொருட்களையும் பிரகடனப்படுத்தாத 'பச்சை வழி' (Green Channel) ஊடாக வெளியேற முயன்ற போதே மாணவி கைது செய்யப்பட்டார்.
மாணவி கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளைச் சோதனையிட்டதில், 140 பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 35 கிலோ 265 கிராம் நிறையுடைய 'ஹஷிஷ்' போதைப்பொருள் மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக, குறித்த மாணவியும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையும் கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மீலும் சந்தேகநபரையும் போதைப்பொருள் தொகையையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஜூன் 24 அன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.