ஆல்பர்ட்டாவில் வரலாறு காணாத அளவில் அதிகரித்த கொரோனா நோயாளிகள்
கனேடிய மாகாணமான ஆல்பர்ட்டாவில், வரலாறு காணாத அளவில் கொரோனா நோயாளிகள் தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதோடு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆல்பர்ட்டா மருத்துவமனைகளில் இதுவரை இல்லாத அளவுக்கு தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த ஐந்து நாட்களில் சராசரியாக தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளொன்றிற்கு 23ஆக உள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் ஆல்பர்ட்டா சுகாதார சேவைகள் அமைப்பின் முதன்மை செயல் அதிகாரியும் இயக்குநருமான Dr. Verna Yiu கூறுகையில்,
தற்போது ஆல்பர்ட்டா மாகாணம் முழுவதிலுமுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 310 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 226பேர் கொரோனா பாதிப்பின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆல்பர்ட்டாவில் முந்தைய கொரோனா அலைகளின்போதும் சரி, ஆல்பர்ட்டா வரலாற்றிலும் சரி, இதுவரை தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் இத்தனை பேர் அனுமதிக்கப்பட்டதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட சில நோயாளிகள் இறந்துபோனதகாவும், அதன் தாக்கம் தீவிரசிகிச்சைப்பிரிவு ஊழியர்களை வெகுவாக பாதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு நாளில் மட்டுமே, ஆல்பர்ட்டாவில் 17 பேர் இறந்துபோனார்கள். 1,058 பேர் கொரோனா காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், ஆல்பர்ட்டாவில் தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் கொரோனா காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருமே தடுப்பூசி பெறாதவர்கள்தான் என ஆல்பர்ட்டா தலைமை மருத்துவ அலுவலரான Dr. Deena Hinshaw, கூறியுள்ளார்.
எனவே , தயவு செய்து அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறும் அவர் ஆல்பர்ட்டா மாகாண மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.