கடற்கொள்ளையில் ஈடுபடும் அமெரிக்கா? ; ஈரானிய இராணுவம் முன்வைக்கும் பகீர் குற்றச்சாட்டு
அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களை முன்னெடுத்தால் மிகக் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஈரானிய ஆயுதப் படைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
அதேவேளை, உலகின் முக்கிய வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீரிணையின் மீதான தமது கட்டுப்பாட்டைத் தொடரப் போவதாகவும் ஈரான் உறுதியளித்துள்ளது.
பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவம் முற்றுகை, கொள்ளையடித்தல் மற்றும் கடற்கொள்ளை போன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டால், ஈரானிய ஆயுதப் படைகளிடமிருந்து நிச்சயமான மற்றும் பலமான பதிலடியைச் சந்திக்க நேரிடும் என்றும் ஈரான் ஆயுதப் படைகள் எச்சரித்துள்ளன.

அமெரிக்க-சியோனிச எதிரிகளின் நகர்வுகளைத் தாம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையைத் தொடர்ந்து நிர்வகித்துத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தீர்மானித்துள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
மீண்டும் ஒரு ஆக்கிரமிப்பு நிகழும் பட்சத்தில், எதிரிகளுக்கு மிகக் கடுமையான சேதங்களை ஏற்படுத்தத் தாம் தயாராக இருப்பதாகவும் ஈரானின் அரச ஊடகமான 'தஸ்னிம்' வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கடற்படை முற்றுகை மற்றும் பாகிஸ்தான் பயண ரத்து அறிவிப்புகளைத் தொடர்ந்து, ஈரானின் இந்த நேரடி எச்சரிக்கை, பிராந்தியத்தில் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.