ஐ.எஸ். எதிர்ப்பு போர் ; புதிய கட்டத்தை நோக்கும் அமெரிக்க தீர்மானம்
ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை ஒடுக்குவதற்காக, சிரியாவில் கடந்த 11 ஆண்டுகளாக இருந்து வந்த அமெரிக்க படைகள் முழுதும் வெளியேறும் நடவடிக்கை துவங்கியுள்ளது.
மேற்காசிய நாடான சிரியாவுக்குள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு எதிராக வான்வெளித் தாக்குதல்களுடன் அமெரிக்கா படைகள், 2014ல் நுழைந்தன.

அரசுக்கு எதிராக போராடி வந்த, சிரிய ஜனநாயகப் படை என்ற துணை ராணுவப் படையுடன் இணைந்து 'ஆப்பரேஷன் இன்ஹெரென்ட் ரிசால்வ்' மூலம், 2019ல் ஐ.எஸ்., பயங்கரவாதிகளை அமெரிக்கப்ப டைகள் பெருமளவு அழித்தன.
அதன் பின்னர் அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 2,000த்தில் இருந்து படிப்படியாக குறைக்கப்பட்டடது.
தற்போது, 1,000 வீரர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த, 2024ல் முன்னாள் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சி வீழ்ந்த பின், முன்னாள் அல் - குவைதா பயங்கரவாதியான அகமது அல் ஷாரா, சிரியாவின் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டார்.
அவர் ஆட்சி பொறுப்பேற்ற உடன், சிரிய ஜனநாயகப் படைகளை, ராணுவத்தில் இணைப்பதற்கான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் வடகிழக்கு பகுதிகள் அரசு கட்டுப்பாட்டுக்கு வந்தன.

புதிய சிரிய அரசு எஞ்சியிருக்கும் ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தைத் தொடரவும், எண்ணெய் வயல்களைப் பாதுகாக்கவும் தயாராக உள்ளதாக உறுதியளித்தது.
இதனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மீதமுள்ள 1,000 அமெரிக்க ராணுவ வீரர்களையும் வெளியேற உத்தரவிட்டார்.
அமெரிக்க ராணுவம், சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள காஸ்ரக் தளத்திலிருந்து வெளியேறும் நடவடிக்கை துவங்கியுள்ளது. இந்த வெளியேற்றம் ஒரு மாதத்திற்குள் முடிவடையும் எதிர்பார்க்கப்படுகிறது.