அமெரிக்கா–ஈரான் மோதல் தீவிரம் ; கேஷ்ம் தீவு மீது ஏவுகணை தாக்குதல்
போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மேற்கொள்ளப்பட்டிருந்த 60 நாள் இடைக்கால ஒப்பந்தம் முறிவடைந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில், உலகின் முக்கிய கடல் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் அமைந்துள்ள ஈரானின் கேஷ்ம் தீவு மீது இன்று பிற்பகல் 10 முதல் 11 ஏவுகணைகள் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.

கேஷ்ம் மாவட்ட ஆளுநர் ஹொசைன் அமிர் தெய்மூரி கூறுகையில், தாக்குதலுக்கு இலக்கானவை அனைத்தும் ராணுவ நிலைகளாகும் என்றும், இதில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை வெளியிட்ட அறிக்கையில், ஏவுகணை மற்றும் டிரோன் ஏவுதளங்கள், ஆயுதக் கிடங்குகள், தகவல் தொடர்பு மையங்கள் உள்ளிட்ட சுமார் 140 ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தாக்குதல் கடந்த சில நாட்களைக் காட்டிலும் அதிக தீவிரத்துடன் நடத்தப்பட்டதாகவும், இதன் மூலம் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஈரானின் திறன் குறைக்கப்படும் என்றும் அமெரிக்க மத்திய கட்டளை குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், "ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதலை நடத்தினோம்" என தெரிவித்திருந்தார்.

கடந்த ஒரு வாரமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணிக்கும் வர்த்தகக் கப்பல்கள் மீது ஓமன் கடற்பகுதியை ஒட்டிய வழித்தடத்தில் ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி சர்வதேச கடல் பாதை என்றும், சட்டபூர்வமாக பயணிக்கும் அனைத்து கப்பல்களுக்கும் அது திறந்தே இருப்பதாகவும் அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது.
கடல் போக்குவரத்து சுதந்திரத்தை உறுதி செய்ய அமெரிக்க படைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களால் கத்தார், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததாகவும், பல இடங்களில் வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.