அமெரிக்காவில் 8.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு
அமெரிக்க மாகாணம் அலாஸ்காவில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அந்த பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆய்வு மையத்தின் தகவல்படி 28-ஆம் திகதி புதன்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 10:15 மணிக்கு 4 மைல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இது மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

முதலில் கண்டறியப்படும் அளவுக்கும் பின்னர் ஆய்வுகளுக்குப் பின்னரும் அளவுகள் மாறுபடலாம். முதலில் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் 7.2 ரிக்டர் அளவில் 55 மைல் ஆழத்தில் நடந்திருப்பதாகக் கணக்கிடப்பட்டது. ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் இந்த நிலநடுக்கத்தை 8.1 ரிக்டர் அளவில் 20 மைல் ஆழத்தில் நடந்திருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளது.
மேலும், அமெரிக்கச் சுனாமி எச்சரிக்கை அமைப்பு, 2,500 மற்றும் 4,600 மைல் தொலைவில் உள்ள அமெரிக்க பசிபிக் பிரதேசங்களான Hawaii மற்றும் Guam பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், 7,000 மைல் தொலைவில் உள்ள நியூசிலாந்துக்கும் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 1965-ஆம் ஆண்டுக்குப் பிறகு வடக்கு அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நிலநடுக்கமாக இது கருதப்படுகிறது.
இந்த மாதம் 22-ஆம் தேதி அலாஸ்காவின் தெற்கு நகரமான சிக்னிக்கில் இருந்து 75 கி.மீ தூரத்தில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மாகாணத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் என்ற போதிலும் தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பாதுகாப்பு நடவடிக்கையாக அதிகாரிகள் அந்த பகுதி மக்களை எச்சரிக்கை படுத்தப்பட்டுள்ளனர். மேலும், மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

