அடிக்கடி நலம் விசாரித்த கணவரை சுட்டுக் கொன்ற பெண்
அமெரிக்காவின் அலபாமா (Alabama) மாகாணத்தில், தனது கணவர் அடிக்கடி வந்து நலம் விசாரித்துத் தொந்தரவு செய்ததால் ஆத்திரமடைந்த 65 வயது பெண், அவரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த ஷெர்ரி கிளாட்ஸ் (Sherri Clutts) என்ற பெண், இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு அறுவை சிகிச்சை செய்துகொண்டு வீட்டில் ஓய்வெடுத்து வந்துள்ளார்.
இதன்போது, அவரது கணவர் திமோதி கிளாட்ஸ் (Timothy Clutts), தனது மனைவியின் ஆரோக்கியம் குறித்து அக்கறையுடன் அடிக்கடி அறைக்குள் வந்து விசாரித்துள்ளார்.

கணவரின் இந்தச் செயல் தனக்கு எரிச்சலூட்டியதாக ஷெர்ரி விசாரணையில் தெரிவித்துள்ளார். கணவர் மீண்டும் அறைக்குள் வருவார் என்று எதிர்பார்த்து ஷெர்ரி துப்பாக்கியைத் தயார் நிலையில் வைத்துள்ளார்.
ஆனால், அவர் வராததால் ஆத்திரமடைந்த ஷெர்ரி, வரவேற்பறைக்குச் சென்று அங்குள்ள நாற்காலியில் அமர்ந்திருந்த கணவரை நோக்கி ஒருமுறை சுட்டுள்ளார். இதில் நெஞ்சில் குண்டு பாய்ந்த திமோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தன்னுடைய 15 ஆண்டு கால கணவரைச் சுட்டுக்கொன்றதை ஷெர்ரி உடனடியாக ஒப்புக்கொண்டார். அவர் கணவரால் தான் எரிச்சலடைந்ததாகக் கூறுகிறார். அவர் இவ்வளவு வெளிப்படையாகப் பேசுவது எங்களுக்குப் பல சந்தேகங்களை எழுப்புகிறது. அவருக்குள் என்ன மனநிலை இருந்தது என்பது குறித்து நாங்கள் விசாரிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தம்பதியினருக்கு இடையே இதற்கு முன்பு குடும்ப வன்முறை தொடர்பான எந்தப் புகார்களும் இருந்ததில்லை என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது ஷெர்ரி கிளாட்ஸ் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, பிணை வழங்கப்படாமல் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.