ஒன்ராறியோவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இனி தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம்
ஒன்ராறியோ மக்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமை பகல் 8 மணி முதல் கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை ஒன்ராறியோ அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இந்த வாரம் மட்டுமே 2.2 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் வரவிருப்பதாவும், இனி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம் எனவும் திங்கள்கிழமை அறிவித்துள்ளனர்.
18 வயதுக்கு மேற்பட்டவர்களும், இந்த ஆண்டு 18 வயது நிரம்புவோரும் தடுப்பூசிக்கு பதிவு செய்யலாம். மே மாத இறுதிக்குள் மொத்தமுள்ள ஒன்ராறியோ மக்களில் 65% பேர்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸாவது அளிக்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மேலும், மே 31 முதல் 12 முதல் 17 வயதுடைய சிறார்கள் பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் பெற தகுதியானவர்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
மே மாதத்தில் மட்டும் 4.3 மில்லியன் தடுப்பூசிகளை பெற மாகாண நிர்வாகம் முயன்று வருகிறது. ஜூன் மாதத்தில் பைசர் நிறுவனத்தின் 4.7 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் வரவிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மத்தியில் தொடங்கி, ஞாயிறு மாலை வரைக்கும் ஒன்ராறியோவில் 7.1 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு டோஸ் தடுப்புசிகளும் பெற்றவர்கள் எண்ணிக்கை 432,760 என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.