கனடாவில் 12 வயது மகன் தொடர்பில் தாயாரின் முடிவு... தந்தை எதிர்ப்பு: நீதிமன்றம் நாடிய குடும்பம்
கியூபெக்கில் தந்தையின் எதிர்ப்பையும் மீறி தாயார் ஒருவர் தனது 12 வயது மகனுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பில் கியூபெக் உயர் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பில், சிறுவன் அவனது தாயின் விருப்பத்திற்கு ஏற்ப தடுப்பூசி போடலாம் என குறிப்பிட்டுள்ளார்.
பள்ளி ஆண்டுக்கு முன்பே தனது மகனுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று குறித்த தாயார் விரும்பியுள்ளார். ஆனால் சிறுவன் ஆரோக்கியமாக இருப்பதால் தற்போது தடுப்பூசியால் எந்த பயனும் இல்லை என்றும் தந்தை வாதிட்டுள்ளார்.
மட்டுமின்றி தடுப்பூசியின் பக்கவிளைவுகள் தொடர்பில் தமது கவலையை நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியதாகவும், தடுப்பூசியால் ஏற்படும் ஒவ்வாமை காரணமாக தமது மகன் அவதிக்குள்ளாக வாய்ப்பிருப்பதாகவும் அவர் வாதிட்டுள்ளார்.
ஆனால், அந்த சிறுவன் தாம் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயார் எனவும், சிறுவனின் மருத்துவரும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிய வந்தது. கியூபெக்கில் கொரோனா நான்காவது அலைக்கு வாய்ப்பிருப்பதால், பள்ளி மாணவர்கள், இளையோர்கள் உள்ளிட்டவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும்,
இதனால் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என பிராந்திய நிர்வாகமும் மக்களை ஊக்கப்படுத்தி வருகிறது.