தடுப்பூசி இடைவெளியை குறைக்கும் கனேடிய மாகாணம்: மக்களுக்கு அழைப்பு
பிரிட்டிஷ் கொலம்பியாவில் இரு தடுப்பூசி டோஸ்களுக்கு இடையிலான கால இடைவெளியை குறைப்பதாக மாகாணத்தின் முதன்மை மருத்துவர் ஒருவர் திங்களன்று தெரிவித்துள்ளார்.
இதுவரை இரு தடுப்பூசி டோஸ்களுக்கு இடையிலான இடைவெளி 49 நாட்கள் என்றிருந்த நிலையில் தற்போது அது 28 நாட்கள் என குறைக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அதிகாரி மருத்துவர் Bonnie Henry தெரிவித்துள்ளார்.
இதனால் எதிர்வரும் நாட்களில் சுமார் 170,000 மக்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சமீபத்தில் டெல்டா மாறுபாடு அதிக தாக்கத்தை ஏற்படுத்திவரும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக தங்களின் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர் Bonnie Henry தெரிவித்துள்ளார்.
ஆனால், டெல்டா மாறுபாடின் தாக்கம் அதிகமில்லாத பகுதியில் வசிக்கும் மக்கள் 6 முதல் 8 வாரங்களுக்கு பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் போதும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது டெல்டா மாறுபாடின் தாக்கம் மத்திய Okanagan பகுதியில் அதிகமாக இருப்பதால், அப்பகுதி மக்களுக்கே, தடுப்பூசி கால இடைவெளியை குறைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் டெல்டா மாறுபாடின் தாக்கத்தில் இருந்து குறித்த பகுதி மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றே சுகாதாரத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவை பொறுத்தமட்டில், 12 வயதுக்கு மேற்பட்ட தகுதியான 81.8 சதவீத மக்கள் ஒரு டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளதாகவும், 68.9% மக்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மே மாதத்திற்கு பிறகு முதன் முறையாக கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் புதிதாக 464 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மக்களில் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.