விரைவில் காலாவதியாகும் தடுப்பூசிகள் ... மாகாணங்களை வலியுறுத்தும் கனடா அரசு
ஆயிரக்கணக்கான டோஸ் ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பு மருந்து இன்னும் சில நாட்களில் காலாவதியாக உள்ளதால், உடனே அவற்றை வாங்கி பயன்படுத்திக்கொள்ளுமாறு மாகாணங்களை கனடா அரசு வலியுறுத்தியுள்ளது.
மாகாணங்களுக்கு கடிதங்களை எழுதியுள்ள பெடரல் சுகாதாரத்துறை அமைச்சரான Patty Hajdu, தடுப்பு மருந்தை இம்மாத இறுதிக்குள் பயன்படுத்த முடியாமல் வைத்திருக்கும் மாகாணங்கள், அவற்றை தேவையிலிருக்கும் மாகாணங்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அவை வீணாகிவிடாமல் இருப்பதை உறுதி செய்ய விரும்பும் அவர், தேவையிலிருப்போர் அவற்றை பயன்படுத்திக்கொள்ள உதவுவதாக தெரிவித்துள்ளார். மொத்தம் எவ்வளவு டோஸ் தடுப்பூசி காலாவதியாகும் நிலையில் உள்ளது என்பது துல்லியமாக தெரியவில்லை. ஒன்ராறியோ 45,000 டோஸ் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை மே மாத இறுதிக்குள் போட்டுவிட பரபரப்பாக முயன்று வருகிறது.
அது போக, 10,000 டோஸ் ஜூன் மாதத்தில் காலாவதியாக உள்ளது. மனித்தோபா, 7,000 டோஸ் தடுப்பூசி இன்னும் சில நாட்களில் காலாவதியாக உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் இரத்தக்கட்டிகள் உருவாகும் பிரச்சினை காரணமாக பல மாகாணங்கள் அதை பயன்படுத்தாமல் நிறுத்திவைத்திருந்தது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், ஏற்கனவே மார்ச் 10 முதல் 19 வரை ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பு மருந்தை வழங்க இருப்பதாக ஒன்றாறியோ கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.
ஆனால், அப்படி ஊசி போட்டுக்கொள்ள தகுதியானவர்கள், அவை கிடைக்கும் மருந்தகங்களைக் கண்டுபிடிக்க கஷ்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.