தடுப்பூசி வாங்குவதை நிறுத்திக் கொண்ட கனடா
தற்போது பயன்படுத்தக்கூடிய அளவை விட அதிகமாக தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதால், தடுப்பூசி வாங்குவதை கனடா நிறுத்திக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் பெரும்பாலான மாகாணங்களில் தடுப்பூசி கையிருப்பு அதிகமாக உள்ளது. மட்டுமின்றி பயன்படுத்தப்படாமல் காலாவதியாகும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
மேலும், செப்டம்பர் இறுதிக்குள் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களில் இருந்து 95 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் கனடாவுக்கு வழங்கப்பட உள்ளது. ஆனால் கனடாவில் தற்போது 18.7 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.
அதுவும், 12 வயதிற்கு மேற்பட்ட தகுதியுள்ளவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்படும் தேவை இருக்காது என்றே கூறப்படுகிறது. இருப்பினும் 8.5 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் மாகாணங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது, இன்னும் அவை பயன்படுத்தப்படவில்லை.
பெடரல் நிர்வாகத்திடம் மேலும் 10.2 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. புதன்கிழமை வெளியான தரவுகளின் அடிப்படையில் தகுதியுள்ள 80 சதவீத கனேடியர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்றே தெரிய வந்துள்ளது.
மேலும், 7 சதவீத மக்கள் தங்கள் முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர். கனடாவில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட 11 மில்லியன் டோஸ் மட்டுமே தேவைப்படும். இதனிடையே ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்தே, பெரும்பாலான மாகாணங்கள் தடுப்பூசி கோருவதை நிறுத்திக் கொண்டுள்ளன.
இந்த நிலையில், சப்ளையர்களுக்கு இப்போதைக்கு மேலும் சரக்குகளை அனுப்ப வேண்டாம் என்று கனடா கூறியுள்ளது. மட்டுமின்றி, தேவைக்கு அதிகமாக இருக்கும் தடுப்பூசி டோஸ்களை தேவைப்படும் நாடுகளுக்கு நன்கொடையாக அளிக்கவும் கனேடிய அதிகாரிகள் தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, 40 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை தானமாக அளிக்க ஏற்கனவே கனடா முன்வந்துள்ளது. டிரினிடாட் மற்றும் டொபாகோ தீவுகளுக்கு 82,000 டோஸ் தடுப்பூசிகளை கனடா நன்கொடையாக அளித்துள்ளது.
மேலும், கொரோனா நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச அளவில் கனடா இதுவரை 2.5 பில்லியன் டொலர் செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தடுப்பூசி டோஸ்கள் பகிர்ந்து கொள்வதும் அடங்கும் என்றே கூறப்படுகிறது.