டெக்சாஸில் கட்டுப்பாட்டை இழந்து வேன் விபத்து ; 10 பேர் பலி
அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸில் புதன்கிழமை சுமார் 30 பேருடன் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்ததுடன், பலர் பலத்த காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெக்சாஸின் என்சினோ அருகே அதிவேக நெடுஞ்சாலை - 281 இல் புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக டெக்சாஸின் பொது பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கூறினார்.
வேனில் பயணித்த பயணிகள் அனைவரும் புலம்பெயர்ந்தவர்கள் என ஆரம்ப கட்ட தகவல்கள் உறுதிபடுத்தியுள்ளன.
எனினும் விபத்துக்குள்ளான வேன் எங்கு பதிவு செய்யப்பட்டது அல்லது யாருக்கு சொந்தமானது என்பது உட்பட எந்த தகவலும் உடனடியாக வெளியிடப்படவில்லை. வேகக் கட்டுப்பாட்டினை இழந்து, வீதியை விட்டு விலகி அருகிலிருந்த உலோகப் பயன்பாட்டு கம்பத்தில் மோதுண்டே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் உறுதிபடுத்தப்பட்ட பின்னர், அவர்களது குடும்பங்களுக்கு அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.


