வளர்த்தவரையே கடித்துக்குதறிய நாய்... கனடாவில் ஒரு பயங்கர சம்பவம்
கனடாவின் வான்கூவரில் அதிகாலை 1.30 மணிக்கு ஒருவர் அலறும் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தவர்கள் பதறிப்போய் என்ன நடக்கிறது என பார்க்க விரைந்துள்ளனர்.
அப்போது, தங்கள் பக்கத்து வீட்டில் வாழும் ஒருவரை, அவர் வளர்த்த நாயே துரத்துவதை அவர்கள் கண்டுள்ளனர். அவர் வீட்டிலிருந்து தப்பி வெளியே ஓடிய நிலையிலும், அந்த நாய் விடாமல் அவரைத் துரத்தியுள்ளது.
உடனே பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது. பொலிசார் வந்து பார்க்கும்போது, அந்த நாய் அவரது கையைக் கடித்துப் பிய்ப்பதையும், எங்கும் சதைத்துணுக்குகள் தெறிப்பதையும் கண்டு, ஷாக் கொடுக்கும் டேஸர் என்ற கருவி மூலம் அந்த நாயைக் கட்டுப்படுத்த முயன்றுள்ளார்கள். ஆனால், அந்த நாய் அடங்கவில்லையாம்.
ஆகவே பொலிசார் ஒருவர் அந்த நாயை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். என்றாலும், அது வீட்டுக்குள் ஓடிவிட்டிருக்கிறது. பல மணி நேரத்திற்குப்பின், வன விலங்கு நிபுணர் ஒருவர் வந்து அந்த நாய் மீது மயக்க ஊசியை துப்பாக்கி மூலம் செலுத்தியிருக்கிறார்.
அதன் பிறகே அந்த நாய் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. அந்த நாயின் உரிமையாளர், கையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வளர்த்த நாயே அதன் எஜமானரை கடித்துக்குதறிய இந்த சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.