வெனிசுவேலா நிலநடுக்கத்தில் 1,000 பேர் பலி ; 70 லட்சம் பேர் பாதிப்பு
வெனிசுவேலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் கிட்டத்தட்ட 67.6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) தெரிவித்துள்ளது.
ஜூன் 24ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த கணிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக, தலைநகர் கராகஸ் நகரில் மட்டும் சுமார் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் பேரிடர் வெனிசுவேலாவின் அண்மைக்கால வரலாற்றில் மிகப்பெரிய இயற்கை அனர்த்தங்களில் ஒன்றாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 என பதிவான இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பல பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன.
இதுவரை 920-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு ஆயிரத்தைத் தாண்டக்கூடும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
இடிபாடுகளில் சிக்கியுள்ள பலரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், 50,000-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக ஐ.நா.வின் மனிதாபிமான உதவிப் பிரிவுத் தலைவர் டாம் ஃபிளெட்சர் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தால் இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகள் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை வழங்க சர்வதேச சமூகத்திடம் ஐ.நா. உதவி கோரியுள்ளது.