மளிகை கடையே இல்லாத கனேடிய கிராமம்: மக்கள் எடுக்கவிருக்கும் புதிய முயற்சி
பிரிட்டிஷ் கொலம்பியாவில் கிராமம் ஒன்றில் 5 ஆண்டுகளாக மளிகை கடை ஏதும் செயல்படாத நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களுக்கு திண்டாடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
வான்கூவர் தீவில் அமைந்துள்ள தொலைதூர கிராமமான Gold River-ல் நீண்ட 5 ஆண்டுகளாக மளிகை கடை ஏதும் செயல்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
2016 வரையில் செயல்பட்டுவந்த பல்பொருள் அங்காடி ஒன்றும் பல்வேறு காரணங்களால் மூடப்பட்டுள்ளது. அதன் பின்னர் அந்த கிராமவாசிகள், தங்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்திற்கும் 90 கி.மீற்றர் தொலைவில் அமைந்துள்ள Campbell River பகுதிக்கு வாகனத்தில் செல்ல வேண்டியுள்ளது.
தற்போது இந்த இக்கட்டான நிலைக்கு Gold River மக்கள் முற்றுப்புள்ளி வைக்க உள்ளனர். ஜனவரி 2022 முதல் Gold River கிராமத்தில் பல்பொருள் அங்காடி ஒன்றை செயல்படுத்த முடிவு செய்துள்ளனர்.
Campbell River பகுதிக்கு வாகனத்தில் செல்ல குறைந்தது 30 டொலர் செலவாகும் என குறிப்பிட்டுள்ள இங்குள்ள மக்கள், ஆனால் Campbell River பகுதியில் அனைத்துப் பொருட்களுக்கும் விலையும் உயர்வு என்கிறார்கள்.
சுமார் 1200 பேர்கள் குடியிருந்து வரும் Gold River கிராமத்தில் புதிதாக கூட்டுறவு மொடலில் பல்பொருள் அங்காடியை துவங்க உள்ளனர். இதுவரை ஆதரவு தெரிவித்து 60 பேர்கள் வாக்களித்துள்ளதாகவும், இது 100 எண்ணிக்கையாக அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.
ஆனால் சமூக ஊடகத்தில் முன்வைக்கப்பட்ட ஆய்வு ஒன்றில், Gold River கிராம மக்களின் இந்த முயற்சிக்கு 500 பேர்கள் வரையில் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும், 300 டொலர் செலுத்தினால் ஆயுள் உறுப்பினராக இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.