வீடு புகுந்து ஆசிரியர் தம்பதிகளை கொடூரமாக படுகொலை செய்த மர்ம கும்பல்!
தமிழகத்தில் வீடு புகுந்து ஆசிரியர் தம்பதியை மர்மநபர்கள் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் - அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் எம்.டி.ஆர். நகரை சேர்ந்தவர் 72 வயதான சங்கரபாண்டியன். இவருடைய மனைவி ஜோதிமணி. இருவரும் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.
இவர்களுடைய மகன் சதீஷ், சென்னை வேளச்சேரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அருப்புக்கோட்டையில் உள்ள வீட்டில் சங்கரபாண்டியன், அவருடைய மனைவி ஜோதிமணி ஆகியோர் மட்டும் வசித்து வந்தனர்.
இவர்களது வீட்டுக்கு நேற்று பிற்பகலில் உறவினர்கள் சிலர் வந்துள்ளனர். அப்போது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது சங்கரபாண்டியனும், ஜோதிமணியும் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்துள்ளனர்.
சங்கரபாண்டியனின் கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டு கிடந்தது. யாரோ மர்மபர்கள் வீடு புகுந்து தம்பதி இருவரையும் கொடூரமாக கொலை செய்திருந்தது தெரியவந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பணம், நகைக்காக இந்த இரட்டைக்கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது பற்றி முழுமையான விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஆசிரியர் தம்பதியை கொலை செய்துவிட்டு தப்பிய கும்பலை பிடிக்க பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.