விசா கட்டணத்தில் சலுகை: அறிவிப்பை வெளியிட்ட அவுஸ்திரேலியா!
கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட வேலை வெற்றிடங்களை உடனடியாக நிரப்பும் முயற்சியாக அவுஸ்திரேலிய அரசு விசா பெறுவதற்கான கட்டணத்தில் சலுகை அறிவித்துள்ளது .
அதன்படி மாணவர் விசா அல்லது வேலை விடுமுறை விசா (working holiday visa) மூலம் அவுஸ்திரேலியாவில் நுழைய விரும்புபவர்களுக்கு விசா கட்டணத்தில் சலுகை தரப்படும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison) தெரிவித்துள்ளார்.
புதிய வருகைகள் அவுஸ்திரேலியாவின் “முக்கியமான தொழிலாளர் பற்றாக்குறையை”, குறிப்பாக விருந்தோம்பல் மற்றும் விவசாயத்துறைகளில் நிரப்ப உதவும் என தான் நம்புவதாகவும் மோரிசன் (Scott Morrison) கூறினார்.
அவுஸ்திரேலியாவின் கான்பரே நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison),
அடுத்த 8 வாரங்களுக்கு மாணவர்கள் விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கும், வேலை விடுமுறை விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அடுத்த 12 வாரங்களுக்கும் கட்டண சலுகை அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் அவுஸ்திரேலிய அரசின் இந்த சலுகைகள் காரணமாக 1,75,000 பேர் வருகை தரலாம் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை அரசுக்கு 55 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது.
கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் அவுஸ்திரேலிய பொருளாதாரம் மிகுந்த நெருக்கடியை சந்தித்து வருகிறது. வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் நடைமுறையின் காரணமாக நாடு முழுவதும் விநியோக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சூப்பர் மார்க்கெட் அலமாரிகள் காலியாக காட்சியளிக்கின்றன. அங்குள்ள பல உணவு மற்றும் தளவாட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களில் 10% முதல் 50% வரை எந்தவொரு நாளிலும் வேலையில் இருந்து விலகியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அண்மையில் கொவிட்-19 பரவலுக்கு முன், அவுஸ்திரேலியாவின் வேலை காலியிடங்கள், நவம்பர் வரையிலான மூன்று மாதங்களில் 18.5% அதிகரித்து கிட்டத்தட்ட 400,000 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் வேலையின்மை விகிதம் முந்தைய இரண்டு மாதங்களில் உயர்ந்த பிறகு நவம்பரில் 4.6% ஆகக் குறைந்துள்ளது.
இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் அந்தோனி அல்பானீஸ், அவுஸ்திரேலியா “வெளிநாட்டுத் தொழிலாளர்களை மிகவும் நம்பியிருக்கிறது” என விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.