மியான்மரில் மீது போர் விமானம் குண்டுகள் வீச்சு ; 3 பெண்கள் உள்பட 14 பேர் பலி
மியான்மரில் பவுத்த மடாலயத்தில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
மியான்மரில் 2வது பெரிய நகரமான மாண்டலே நகரில் இருந்து மேற்கே 75 கிலோமீட்டர் தொலைவில் ஸ்வெல்லேஓ என்ற கிராமம் உள்ளது.
இங்கு பவுத்த மடாலயம் ஒன்று உள்ளது. அதில் ஒரு வார கால தியான பயிற்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

அதன் படி, அங்கு பலரும் தியான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மியான்மர் ராணுவத்தின் போர் விமானங்கள் வான்வழியாக தாக்குதல் நடத்தியது.
இதில் 3 பெண்கள் உள்பட14 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் குறித்து ஊர்மக்கள் கூறுகையில்,' ஜெட் விமானம்15 நிமிட இடைவெளியில் இரண்டு குண்டுகளை வீசியது.
பவுத்த நோன்பு காலம் என்பதால் மடாலயத்தில் 100க்கும் மேற்பட்டோர் தியான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த மடாலயம் அருகில் உள்ள ஒரு வீட்டை இரண்டாவது குண்டு சேதப்படுத்தியது' என்றனர்.
மியான்மரில் ராணுவம், ஜனநாயக ஆதரவு படைகள் மற்றும் இன ஆயுதக்குழுக்கள் இடையே தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
இதுபோன்ற தாக்குதலில் பொதுமக்களும் உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.