வாட்டர்லூ பிராந்தியத்தில் அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் 10,000 நோயாளிகள்
கொரோனா பரவலால் முக்கிய அறுவை சிகிச்சைகள் தள்ளி வைக்கப்பட்டதால் வாட்டர்லூ பிராந்தியத்தில் மட்டும் அந்த எண்ணிக்கை 10,000 கடந்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக அனைத்து மருத்துவமனைகளிலும் அறுவை சிகிச்சைகள் மொத்தமாக நிறுத்தப்பட்டன. இதனால் பலர் மரணமடைந்துள்ளதுடன், சிலர் தங்கள் வாய்ப்புக்காக பல மாதங்களாக காத்திருந்து வருகின்றனர்.
அந்தவகையில் வாட்டர்லூ பிராந்தியத்தில் மட்டும் அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர்களின் எண்ணிக்கை 10,000 கடந்துள்ளது என தெரிய வந்துள்ளது.
செயின்ட் மேரிஸ் பொது மருத்துவமனையில் சுமார் 7,575 நோயாளிகள் உள்ளனர், கேம்பிரிட்ஜ் மெமோரியலில் சுமார் 2,400 பேர் உள்ளனர். கிராண்ட் ரிவர் மருத்துவமனை இதுவரை பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கையை வழங்கவில்லை.
பல நோயாளிகளுக்கு பலமுறை அறுவை சிகிச்சைகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஒன்ராறியோ அரசாங்கம் உரிய நடவடிக்கை முன்னெடுக்க மருத்துவமனைகளுக்கு போதிய நிதியுதவி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, போதிய வசதிகள் இல்லாத உள்ளூர் மருத்துவமனைகளும் இதனால் பயன்பெறும் எனவும், அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை இதனால் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றே நம்பப்படுகிறது.
இதனிடையே, கடந்த ஆண்டு மார்ச் மற்றும் இந்த ஆண்டுக்கு இடையில் தேவையான அறுவை சிகிச்சைகளுக்காக காத்திருந்த நான்கு நோயாளிகளில் மூன்று பேர் சிகிச்சை பெற்றதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.