கனேடிய நகரம் ஒன்றில் திடீரென தடைபட்ட தபால் சேவை... ஒரு அருவருப்பான பின்னணி
கனேடிய நகரம் ஒன்றிற்கு தபால் வருவது திடீரென ஒரு நாள் தடைபட்டுள்ளது. West Kelowna என்னும் அந்த நகர மக்கள் இது குறித்து தபால் சேவை மையத்திடம் விசாரித்துள்ளார்கள்.
அப்போது, அவர்களுடைய நகரத்துக்கு தபால் பட்டுவாடா செய்யும் பெண் ஒழுங்காகத்தான் பணிக்கு வருகிறார் என்றும், ஆனால், அவரால் கடிதங்களை அந்த நகரத்திற்கான தபால் பெட்டியில் போட முடியவில்லை என்றும் அவர்களுக்கு கூறப்பட்டுள்ளது.
அதற்குக் காரணம், அந்த பகுதியில் அமைந்துள்ள தபால் பெட்டியைச் சுற்றி நாயின் கழிவு அடங்கிய பைகள் போடப்பட்டுள்ளதாம்.
அந்த பகுதி அருவருப்பாக உள்ளதால், தபால் பட்டுவாடா செய்யும் பெண் அந்த தபால் பெட்டியில் கடிதங்களைப் போடாமலே சென்றுவிடுகிறாராம்.
விடயம் என்னவென்றால், அந்த தபால் பெட்டி அமைந்துள்ள பகுதியிலேயே ஒரு குப்பைத் தொட்டியும் உள்ளது.
நாயின் கழிவுகள் அடங்கிய பைகளை மக்கள் அந்த குப்பைத் தொட்டியில் வீசும்போது, அவை தவறி கீழே விழுந்துவிடுவதாக கருதப்படுகிறது.
தற்போது இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டதாக கனடா தபால் சேவை தெரிவித்துள்ளது.