பிரிட்டிஷ் மகாராணிக்கு இது நேர்ந்தால் செய்யவேண்டியது என்ன?' கசிந்த அரசின் திட்டங்கள்!
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு தற்போது 95 வயதாகின்ற நிலையில் அவர் தற்போதுவரை நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வருகிறார்.
இந்நிலையில் ஒருவேளை இங்கிலாந்து மகாராணி காலமானால் அவரது இறுதிச் சடங்கை எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதை பிரிட்டிஷ் அரசு ஆவனப்படுத்தி வைத்திருப்பதாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் `பொலிட்டிகோ' என்கிற அரசியல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் ஆபரேஷன் லண்டன் பிரிட்ஜ்' (Operation London Bridge) என்கிற குறியீட்டில் உருவாக்கப்பட்டுள்ள அந்த டாக்குமென்ட்டில், இங்கிலாந்து மகாராணி மறையும் நாளை 'D Day' (Dark Day), அதாவது கறுப்பு நாள் என அறிவிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டிஷ் வரலாற்றில் மிக நீண்டகாலம் அரசியாக சேவை செய்த இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைந்தால் 10 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.
அத்துடன் , அரசியின் உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்குள் அடுத்த அரசராக பட்டம் சூட்டப்படவிருக்கும் இளவரசர் சார்லஸ் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவற்றை உள்ளடக்கிய யுனைடட் கிங்டம் (UNITED KINGDOM) முழுவதும் பயணப்பட்டுத் திரும்பவேண்டும் என்றும் அந்த டாக்குமென்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் `பொலிட்டிகோ' இதழ் கூறுகிறது.
அதுமட்டுமல்லாமல் மகாராணியின் மறைந்த உடலானது பாராளுமன்றத்தில் மூன்று நாள்கள் வைக்கப்படும் என்கிற செய்தியும் வெளியாகியிருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, லட்சக்கணக்கான மக்கள் மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருவார்கள் என்பதால் கட்டுக்கடங்காமல் குவியும் மக்களை ஒழுங்குபடுத்த விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ராணியின் இறுதிக் காரியங்கள் செய்யப்படும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.
இங்கிலாந்து அரசர் மற்றும் இங்கிலாந்து பிரதமர் ஆகியோர் முன்பு செய்துகொண்ட உடன்படிக்கையின்படி மகாராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் நாளன்று நாடு முழுவதும் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அந்த டாக்குமென்ட்டில் சொல்லப்பட்டுள்ளது.
எனினும் அந்த நாளில் தேசிய விடுமுறை அளிக்கப்படுமா என்பதுகுறித்த தகவல்கள் எதுவும் இல்லை.
இதேவேளை இது இவ்வாறிருக்க சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, புகழ்பெற்ற `தி கார்டியன்' பிரிட்டிஷ் தினசரி இந்த 'ஆபரேஷன் லண்டன் பிரிட்ஜ்' குறித்த செய்திகளை வெளியிட்டிருந்தது.
குறிப்பாக ராணியின் மறைவுக்குப் பிறகு புதிய அரசராகப் பொறுப்பேற்கும் சார்லஸ் குறித்த அறிவிப்பை புனித ஜேம்ஸ் அரண்மனையில் எவ்வாறு நிகழ்த்துவது என்பது குறித்து பிரிட்டிஷ் அரசு திட்டம் தீட்டி வைத்துள்ளதாக `தி கார்டியன்' அப்போது கூறியிருந்தது.
மொத்தத்தில் இங்கிலாந்து மகாராணி உயிருடன் இருக்கும்போதே அவர் இறந்தால் எப்படியெல்லாம் இறுதி ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்று இங்கிலாந்து அரசு போட்டுவைத்துள்ள இத்திட்டங்கள், உலகம் முழுக்க மக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.