இலங்கையின் நிலை தொடர்பில் சர்வதேச ஊடகத்திடம் பிரதமர் வெளியிட்ட தகவல்
எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் இலங்கை உணவு நெருக்கடியை சந்திக்க நேரிடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஸ்கைநியூஸ் செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.
இலங்கை வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்னர் இலங்கைக்கு இவ்வாறு நடந்ததில்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
எங்களிடம் டொலர்கள் இல்லை, ரூபாய் இல்லை, இனி மக்கள் சுமையைத் தாங்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
கடன்களை மீள செலுத்த முடியாத நிலையில் இலங்கை இருப்பதை ஏற்றுக்கொண்ட அவர், ஏனைய நாடுகளினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் ஒத்துழைப்புடன் அப்பிரச்சினையை நிவர்த்திக்க எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இராஜினாமா செய்வது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் வழங்கினார்.
காலி முகத்திடலில் போராடும் இளைஞர்களும் சில அரசியல் கட்சிகளும் ஜனாதிபதி இராஜினாமா செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருப்பதாகக் கூறினார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிக்கின்ற போதும், ஜனாதிபதி இராஜினாமா செய்ய வேண்டும் என கூறவில்லை என்பதை ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு ஜப்பான் நிதி உதவி வழங்க தீர்மானித்துள்ளது. இதன்படி அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதில் 1.5 மில்லியன் அடுத்த இரண்டு மாதங்களில் 25 மருந்துகளுக்கு செலவிடப்படும். அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்காக 1.5 மில்லியன் டொலர் வழங்கப்படும்.
இதேவேளை, இந்திய ரூபாயில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இலங்கைக்கு அனுமதி வழங்க இந்திய மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் இலங்கையிடமிருந்து பணத்தைப் பெறுவதில் இந்திய ஏற்றுமதியாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களே இதற்குக் காரணம்.