ஆப்கானிஸ்தானில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கு தடை!
ஆப்கானிஸ்தானில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கு தலீபான்கள் தடைவிதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலீபான்களின் புதிய அரசாங்கத்தை உலக நாடுகள் எதுவும் முறைப்படி அங்கீகரிக்காததால் அந்த நாட்டுக்கு சர்வதேச நிதி கிடைப்பது தடைப்பட்டுள்ளது.
இதனால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு 2 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகள் கூறுகிறது.
இந்த நிலையில் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆப்கானிஸ்தானில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கு தலீபான்கள் தடைவிதித்துள்ளனர்.
இது தொடர்பில் வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில்,
கோதுமை ஏற்றுமதியை நிறுத்துமாறு நாட்டிலுள்ள அனைத்து சுங்க அலுவலகங்களுக்கும் நிதி மந்திரி முல்லா ஹிதாயத்துல்லா பத்ரி உத்தரவிட்டுள்ளதாகவும், நாட்டில் கோதுமை தட்டுப்பாட்டைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.