கனடாவில் அசாதாரண விபத்தொன்றில் அமெரிக்கர் பலி
கனடாவில் நிகழ்ந்த அசாதாரண விபத்தொன்றில் அமெரிக்கர் ஒருவர் பலியானார்.
நேற்று காலை 11.45 மணியளவில், கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Queen Elizabeth Way நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ட்ரக் ஒன்றின் சக்கரம் ஒன்று திடீரென கழன்று ஓடியது.
வேகமாக உருண்டோடிய அந்த சக்கரம் இரண்டு வாகனங்கள் மீது மோதி பிறகு கிழே சாய்ந்துள்ளது.
அந்த சக்கரம் மோதியதில், ஒரு கார் பலத்த சேதமடைய, அந்த காரை ஓட்டிய 53 வயதான சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். அவர் ஒரு அமெரிக்கர் ஆவார்.
அவருடன் அதே காரில் பயணித்த 52 வயதுடைய பயணி ஒருவர் காயமடைந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சக்கரம் கழன்று ஓடிய ட்ரக்கின் சாரதியும் ஒரு அமெரிக்கர்தான். பாதுகாப்பற்ற ஒரு வாகனத்தை ஓட்டிய அந்த 33 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது ட்ரக்கின் முன் சக்கரம் கழன்று ஓடிய நிலையிலும், அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.