சரியாக நடக்க முடியாத குழந்தையின் சக்கர நாற்காலியை திருடிச் சென்ற நபர்
ஒன்ராறியோவில் சரியாக நடக்க முடியாத ஒரு குழந்தையின் சக்கர நாற்காலியை திருடிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நபர் சிக்கியுள்ளார்.
ஒன்ராறியோவிலுள்ள லண்டனில் வாழும் Aaliyah Faulknor (9), செரிப்ரல் பால்சி என்னும் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டுள்ளாள். அவளால் சிறிது தூரம் மட்டுமே நடக்க முடியும் என்பதால், அவளது பெற்றோர் ஆயிரக்கணக்கான டொலர்கள் செலவு செய்து அவளுக்காக ஒரு சிறப்பு சக்கர நாற்காலியை செய்து கொடுத்துள்ளார்கள். ஆனால், மர்ம நபர் ஒருவர் அந்த நாற்காலியை திருடிச் சென்றுவிட்டார்
. நேற்று மாலை Aaliyahவின் வீட்டுக்கு வந்த பொலிசார் நாற்காலி கிடைத்து விட்டதாக தெரிவித்துள்ளார்கள். நாற்காலியை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து கத்தி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிசார் அவரை விசாரித்து வருகிறார்கள். பிரச்சினை என்னவென்றால், Aaliyahவுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அந்த சக்கர நாற்காலி, இப்போது வளைந்துபோய் உள்ளது, பல பாகங்கள் சேதமடைந்துள்ளன.
அதை வாங்க காப்பீடு உதவும் என்றாலும், அதன் பாகங்கள் எளிதில் கிடைக்காது என்பதால், Aaliyah குறைந்தது ஒரு ஆண்டாவது சக்கர நாற்காலிக்காக காத்திருக்கவேண்டும் என்பதுதான் சோகமான விடயம்.