தாயாரும் பிஞ்சு குழந்தையும் புதைக்கப்பட்ட இடம்: கனேடிய பொலிசாரிடம் ஏமாந்த கொலைகாரன்
கல்கரியில் காதலியையும் அவரது பிஞ்சு குழந்தையையும் கொன்று புதைத்த இடத்தை ரகசிய பொலிசாரிடம் கொலைகாரனே அடையாளம் காட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
குறித்த கொலை வழக்கு விசாரணையில் ஈடுபட்டிருந்த இரகசிய பொலிசாரை, பனி மூடிய பகுதியில், நள்ளிரவில் அழைத்து சென்று அந்த நபர் அடையாளம் காட்டியுள்ளார்.
கல்கரியில் ஜாஸ்மின் லோவெட் மற்றும் பிறந்து 22 மாதங்களேயான இவரது குழந்தை ஆகியோரை கொலை செய்து புதைத்த வழக்கில் 36 வயதான ராபர்ட் லீமிங் என்பவர் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஏப்ரல் மாதம் ஜாஸ்மின் லோவெட் என்பவர் அவரது பிஞ்சு குழந்தையுடன் மாயமானதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் ஈடுபட்டிருந்த இரு இரகசிய பொலிசாரிடம் ராபர்ட் லீமிங் நட்பு பாராட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஒருகட்டத்தில் தமது காதலி மற்றும் அவரது குழந்தையை கொன்று புதைத்த இடத்தையும் இரகசிய பொலிசார் என தெரியாமலே அவர்களுக்கு அடையாளம் காட்டியுள்ளார் லீமிங்.
மட்டுமின்றி சம்பவத்தன்று என்ன நடந்தது என்பது தொடர்பிலும் லீமிங் இரகசிய பொலிசாரிடம் விளக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இரகசிய பொலிசார் என தெரியாமலையே லீமிங் அவர்களிடம் ஏமாந்தது, இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.