ஐ.நாவில் பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்த இந்திய வெளியுறவு அதிகாரி சினேகா தூபே யார் தெரியுமா?
ஐ.நா அவையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியா தொடர்பாக வெளியிட்ட கருத்துகளுக்கு எதிர்வினையாற்றும் வகையில் கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி இந்திய வெளியுறவு அதிகாரி சினேகா தூபே பேசிய காணொளி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூரை பூர்விகமாகக் கொண்டவர் சினேகா தூபே. இவரது தந்தை ஒரு பொறியியலாளர். தாயார் ஆசிரியர். கோவாவில் பள்ளிப்படிப்பை முடித்த சினேகா, புணேவில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பும் டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதே விவகாரங்கள் துறையில் ஆய்வுப்பட்டமும் பெற்றார்.
மத்திய பொதுப்பணித்துறை தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வில் முதல் முயற்சியிலேயே இவர் 2011ஆம் ஆண்டில் வெற்றி பெற்றார். 2012இல் இவருக்கு இந்திய வெளியுறவுப் பணி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறையில் பணியில் சேர்ந்த இவர் இளநிலைச் செயலாளராக சில ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் ஸ்பெயினின் மேட்ரிட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் மூன்றாவது செயலாளர் ஆக பணியாற்றினார். பிறகு இரண்டாம் நிலை செயலாளராக இருந்து முதலாம் நிலை செயலாளராக பதவி உயர்வு பெற்று ஐ.நாவில் உள்ள இந்திய நிரந்தர பிரதிநிதி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.
வழக்கமாக சர்வதேச மன்றங்களில் தாயக நாடுகள் மீது பிற நாடுகள் குற்றம்சாட்டும்போது, அதற்கு பதில் தரும் வாய்ப்பு சம்பந்தப்பட்ட நாட்டுக்கு வழங்கப்படும். அந்த வகையில் ஐ.நா. அரங்கில் பல்வேறு நாடுகளின் அதிகாரிகள் தங்களுடைய பதிலை பதிவு செய்வர். அந்த வகையில், சினேகா தூபேவை போலவே கடந்த காலங்களிலும் இந்திய வெளியுறவு அதிகாரிகள் பலர் பாகிஸ்கான் சுமத்திய பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு, எதிர்வினையாற்றும் வாய்ப்பு கிடைத்தபோது உடனுக்குடன் பதில் கொடுத்துள்ளனர்.
இதற்கிடையே, கடந்த 25ஆம் திகதி சினேகா ஐ.நா அரங்கில் சினேகா ஆற்றிய எதிர்வினை தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. இதையடுத்து ஐ.நா நிகழ்வுகள் தொடர்பான செய்தியை சேகரிக்க இந்தியாவில் இருந்து நியூயார்க் சென்றிருந்த இந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி பெண் செய்தியாளர், கூட்டத்தின் முடிவில் சினேகா ஓய்வெடுத்திருந்த அரங்கின் பகுதிக்கு தமது ஒளிப்பதிவாளர் உதவியுடன் கேமிராவை நேரலையாக ஆன் செய்து கொண்டு, அவரை பேட்டி எடுக்க முற்பட்டார்.
ஆனால், அவருக்கு தமது நேர்காணலை தர முடியாது என்பதை, எழுந்து நின்று வணக்கம் தெரிவித்து, தயவு செய்து வெளியே செல்லுங்கள் என்பது போல செய்கையிலேயே காண்பித்து நேர்காணலை தவிர்த்தார் சினேகா. இந்த காணொளியும் தற்போது இணையத்தில் வைரலாகியிருக்கிறது.